Monday, February 13, 2012

திருமண வேளை 4: கடலை மிட்டாய்

திருமண விருந்திற்கு சமையல் கலைஞர்களை தேர்வு செயத பின், உணவு பண்டங்களை பற்றி அப்பா அம்மாவுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது,

'பாத்தியா கடலை மிட்டாயை விட்டுட்டோம்' ..... இது என் அப்பா.

'அட ஆமா கடலை மிட்டாயை மறந்திட்டோம். கண்டிப்பா சேர்க்கனும்'..... இது என் அம்மா.

'???!!!!ுதம்புத்முஇதமிஅஉ*&%%&**&ஈடனூபரிஒரதமி!!!-+=!!' .... இது நான்.
ஒன்னும் புரியல.

வீட்ல நடக்குற கடைசி திருமணத்தின் விருந்தில் கடலை மிட்டாய் வைக்கனுமாம்.
அதன் பொருள், 'எங்க வீட்ல நடக்குற கடைசி திருமணம்.'

எனக்கென்னமோ இதல ஏதோ உள் குத்து இருக்குற மாதிரி தோனுது. கண்டுபிடிச்சவுங்க சொல்லுங்க.

Saturday, February 11, 2012

திருமண வேளை 3: பழகிய முகங்கள்

பள்ளி முடிந்து, கல்லூரி வந்த போது பலரது தொடர்பை விட்டுவிட்டேன். இப்போது திருமணத்திற்கு அழைப்பதற்காக பழைய - பழகிய முகங்களை மீண்டும் தேடுகிறேன்.

அவ்வாறாக இன்று, பத்தாம் வகுப்பு உயிரியல் ஆசிரியர் ராபர்ட் அவர்களை 12 ஆண்டுகள் கழித்து இன்று தொலைபேசியில் அழைத்தேன். 2000ஆம் ஆண்டு தேர்வு எழுதிய பின் அவரை பார்க்கவோ பேசவோ இல்லை.

அவரது ஞாபகத்தில் நான் இருப்பேனா என்ற சந்தேகத்துடன். "சார் நான் உங்களது பழைய மாணவன். என் பெயர் மோகன்குமார். என்னை ஞாபகம் இருக்கா"?
சிறிதும் யோசிக்காமல் பதில் வந்தது "மோகன்குமார் ..... கண்ணாடி போட்டிருப்ப..... வேடசந்தூர் தான....."

ஒரு மாணவணுக்கு வாழ்க்கையில் மொத்தமாக 60 அல்லது 70 ஆசிரியர்கள் இருக்க முடியும். ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஆண்டுக்கு 60 - 70 மாணவர்கள்.

எனது ஞாபகத்தில் கடல். கடலின் ஞாபகத்தில் நான். இந்த வேறுபாட்டின் அளவே எனது மகிழ்ச்சியின் அளவு.

அடுத்தது இயற்பியல் ஆசிரியர் அழகப்பன் மற்றும் தமிழ் ஆசிரியர் கிளாட்சன்.